பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பது தொடர்பாக ஒன்றுமே செய்ய முடியாது: திருநாவுக்கரசர் திட்டவட்டம்
7 பேர் விடுவிப்பது தொடர்பாக இனி ஒன்றும் செய்ய முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுவிப்பது தொடர்பாக இனி அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உதகை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
விபத்தில் சிக்கியவர்களில் சிலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அங்கு ஏ.சி வசிதி இல்லை. தேவைப்பட்டால் இவர்களை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் . விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி போதாது. குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும்
காயமடைந்தவர்களுக்கும் கணிசமாக நிதி உதவி செய்ய வேண்டும்.
சுற்றுலாதலமான உதகையில் அதிநவீன வசதி கொண்ட மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஹிந்துஸ்தான் போட்டோ அரங்கை மருத்துவமனையாக மாற்றலாம். மலைபாதையில் நல்ல நிலையில் உள்ள பேருந்து இயக்கப்படுகின்றனவா என போக்குவரத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், நீதி கிடைக்க நீதிமன்றத்தையே நாட வேண்டும். குடியரசு தலைவர் நிராகரித்த பின்னர்
அரசியல் ரீதியில் இனி முயற்சிக்க முடியாது. மகன் சிறையில் உள்ளதால், பேரறிவாளனை கருணை கொலை செய்யலாம் என மன அழுத்தத்தில் அற்புதம்மாள் பேசி இருக்கலாம், கருணை கொலை அங்கீகரிப்பது இல்லை. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி காலம் தாழ்த்தாமல் வெகு சீக்கிரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.