விவசாயிகளை கைவிட்டு விட்ட எடப்பாடி அரசு… இனி என்ன நடுரோடுதான்!
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளை எடப்பாடி பழனிச்சாமி அரசு கைவிட்டுவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் விவசாய மேம்பாட்டிற்கோ அல்லது விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பது போன்றே எந்த ஒரு திட்டமும் இல்லை என்று விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
வறட்சி மாநிலம்
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆறுதலாக பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
செயல்படுத்தாத திட்டங்கள்
ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் கூட எந்த அளவிற்கு நிறைவேற்றபடும் என்ற சந்தேகம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பயிர் கடன் தள்ளுபடி
பயிர்கள் கருகியதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் வாங்கிய கடன்கள் அடைக்கப்படாமல் வங்கிகள் அவர்களை அவமானப்படுத்தி வருகிறது. இதனைக் கணக்கில் கொண்டு பயிர்கடன்களையாவது தள்ளுபடி செய்து பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம் என்று எதிர்ப்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம்.
மராமத்து பணிகள்
தமிழகம் முழுவதும் சுமார் 38,000 ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டும். அமராவதி அணை 59 ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை. தூர்வாரப்படும் என அரசு அறிவிக்கிறதே தவிர அதை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.