ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் எந்த மாற்றமும் வந்துவிடாது - தமிழிசை சவுந்தராஜன்
காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வானதால் எந்த மாற்றமும் வராது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்ததன் மூலம் ஒரு குடும்பத்தின் கையில் மீண்டும் கட்சியை கொடுத்துள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
132 ஆண்டு கால வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் தலைவராக சோனியா கடந்த 19 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். சுதந்திரம் கிடைத்த காலக்கட்டத்தில் நேருவும், அவருக்கு பின் அவரது மகள் இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆனார்கள்.
ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பின் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர் பதவியில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தனர். கடந்த 1998ல் அவரது மனைவி சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். தற்போது அவரது மகன் ராகுல் அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரு குடும்பத்திலிருந்து 6வது நபராக தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க உள்ளார். வரும் 18ஆம் தேதி குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இது குறித்து கருத்து கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தார். ஒரு குடும்பத்தின் கையில் மீண்டும் கட்சியை கொடுத்திருக்கின்றனர்.
ராகுல்காந்தி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்திருக்கிறார். அவர் பொறுப்புக்கு வந்த பின்னர் பல தோல்விகளை சந்தித்துள்ளது. இனியும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் தமிழிசை கூறினார்.
நேரு குடும்பத்தினரைத் தவிர, ராகுல்காந்தியை தவிர அந்த கட்சியில் தலைமை பொறுப்புக்கு வர யாருக்குமே தகுதியில்லையா என்று கேட்ட தமிழிசை, இந்திய அளவிலோ தமிழக அளவிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
பாஜகவிற்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.