தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு 2001 முதல் 2014 ம் ஆண்டு வரை தனியாரிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது . இவ்வாறு மின்சாரம் வாங்கியதில் சுமார் ஒரு லட்சம் கோடி வரை முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் ஞானதேசிகன் இந்த அமைப்பின் தலைவராக இருந்த சமயத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது .
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். இதன் நிர்வாகத்தை புதிய நிர்வாகிகளிடம் தற்காலிகமாக ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த கழகத்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு குறித்து மத்திய தணிக்கை கணக்கு முன்னாள் அதிகாரி வினோத் ராய் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவில் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விவரங்கள் குறிப்பிடப்படாததால், ஜனவரி 6-ந் தேதி, மனுதாரர் விரிவான தகவல்களுடன் கூடிய புதிய மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளனர்.