ரவுடி குள்ள ஜெகாவுக்கு ஸ்கெட்ச்... அலேக்காக சிடி மணியை தூக்கிய போலீஸ்
ரவுடி குள்ள ஜெகாவை போட்டுத் தள்ள ஸ்கெட்ச் போட்டிருந்தாராம் சிடி மணி.
Recommended Video
சென்னை: பிரபல ரவுடி குள்ள ஜெகாவுக்கை கொல்ல நினைத்த சி.டி.மணியை ஸ்ரீபெரும்புதூரில் வளைத்திருக்கிறது தமிழக காவல்துறை. சிறையில் இருந்து பினு வெளியே வந்ததை அடுத்து, மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ரவுடிகள் வட்டாரத்தில்.
மலையம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஒன்றுகூடிய ரவுடிகளை, போலீஸார் சுற்றி வளைத்தனர். இந்த விவகாரத்தில் பல்லு மதன் என்ற ரவுடி கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கைது சம்பவம் நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பினு, ஒருகட்டத்தில் போலீஸில் சரணடைந்தார். அவர் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், ' நான் ஒரு சர்க்கரை நோயாளி. பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என வலுக்கட்டாயமாகக் கூறியதால்தான் வந்தேன். நீங்கள் சொல்வது போல் நான் ஒரு பெரிய ரவுடி இல்லை. எனக்கு வயதாகிவிட்டது' என சோகத்துடன் கொடுத்த பேட்டி, ரவுடிகள் வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்தது.
இதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டார் பினு. அவர் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து வெளியில் வந்துவிட்டார். இந்நிலையில், சி.டி.மணி கைது செய்யப்பட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் சென்னை மாநகரத்தில் கோலோச்சும் ரவுடிகள். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், மிரட்டல், ஆள்கடத்தல், ரியல் எஸ்டேட், கொலை, கொலை முயற்சி என சி.டி.மணியின் உலகம் பெரிது. திண்டுக்கல் பாண்டி அறிமுகத்துக்குப் பிறகுதான், அவருடைய வாழ்க்கையே மாறிப் போனது. 2009ஆம் ஆண்டு பாண்டியை என்கவுண்ட்டர் செய்த பின், மணியின் ஆட்டம் அதிகமானது. பாண்டி கூட்டத்துக்குள்ளேயே, நீயா நானா... மோதல் வலுத்ததால், மணி குரூப்புக்கும் மோகன் ராம் குரூப்புக்கும் இடையில் பல தலைகள் உருண்டன.
சதீஷ், திவாகரன், சங்கர் என அடுத்தடுத்த படுகொலைகள், மணி மீது அச்சத்தை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் போலீஸின் பிடியில் சிக்கினார். ஜாமீனில் வெளிவந்த நேரத்தில், சைதாப்பேட்டை குள்ள ஜெகாவைக் குறிவைத்தார். இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் பஞ்சாயத்து இருப்பதாகவும் பேசப்பட்டது. குள்ள ஜெகா வழக்கில் அவ்வளவு எளிதில் மணி சிக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் வளைக்கப்பட்டார்.
பினுவின் பிறந்தநாள் விழாவில் மணியும் கலந்து கொள்வதாக இருந்தது. இதைப் பற்றி மணியின் எதிர்கோஷ்டி, போலீஸுக்கு உளவு சொன்னது. இதனை தன்னுடைய சோர்ஸுகள் மூலம் மோப்பம் பிடித்த மணி, சம்பவ இடத்துக்கு வராமல் தப்பிவிட்டார்.
கடந்த இரு வாரங்களாக குள்ள ஜெகாவைப் போட்டுத் தள்ளுவதற்கு ரூட் போட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த போலீஸார், சரியான நேரம் பார்த்து சி.டி.மணியை வளைத்துவிட்டனர். இப்போது பினு வெளியில் இருக்கிறார். மணி உள்ளே இருக்கிறார்" என்கின்றனர்.