நீர் நிலைகளில் குடியிருப்புகள்... "குறள்" எழுதி ரசிக்கும் மக்கள்!
சென்னை: "ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில் கட்டிய வீட்டில்"
என்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த ஒருவர் மனம் நொந்து எழுதியுள்ளார். ஏரிகளும் குளங்களும் கான்கரீட் கட்டிடங்களாக மாறியதால் தங்களின் இருப்பிடத்தை தேடி அலைந்த தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பல லட்சம் மக்கள் மேடான பகுதிகளை நோக்கி ஓடத்தொடங்கியுள்ளனர். ஓடும் ஓட்டத்தில் தங்களின் மனநிலையினை குறளாக வடித்து வலைதளங்களில் உலாவ விட்டுள்ளனர்.
சென்னையின் புறநகரில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிய வீடுகளும், வண்டி, வாகனங்களும் தண்ணீரால் சூழப்பட மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள்தான் என்று குட்டியுள்ளது உயர்நீதிமன்றம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,450 ஏரிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தி.நகர், வள்ளுவர் கோட்டம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் 36 ஏரிகள் இருந்துள்ளன. நகரமயமாக்கல் அதிகரிப்பால், இவை அழிந்துவிட்டன. புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
சென்னை ஏரிகள்
சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 4 ஏரிகள்தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கொரட்டூர், போரூர், வளசர வாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம், உள்ளகரம், கீழ் கட்டளை, ஜமீன் பல்லாவரம், செம்பாக்கம் ஏரிகள் அந்தந்த இடங் களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. இவைதான் நீலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளன.
ஏரிகள் ஆக்கிரமிப்பு
தாழ்வான பகுதிகளில் சேரும் மழைநீர், கால்வாய்கள் வழியாக குளத்தை அடையும். உபரிநீர் அங்கிருந்து கால்வாய் வழியாக கடலைச் சென்றடையும். பொதுவாக நீர்நிலைகளில் பாசனத்துக்காக நீரை வெளியேற்றும் அமைப்புகளும், ஏரி நிரம்பினால் தானாக உபரிநீர் வெளியேறும் கலங்கல் என்ற அமைப்பும் இருக்கும். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெரும்பாலான ஏரிகளில் இந்த கலங்கல் இல்லை.
வெள்ள பாதிப்புக்கு காரணம்
ஏரி ஆக்கிரமிப்புகளும், மழைநீர் வடிகால்கள் அழிக்கப்பட்டதும்தான் சென்னையின் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர். மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், கடலுக்குள் செல்லும் முகத்துவாரங்கள் குறுகிவிட்டதாலும் வெள்ளநீர் வடிய தாமதமாகிறது என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
நீச்சலடித்த வாடகைவாசிகள்
கடந்த 20 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லை. எனவேதான் வெள்ளத்தில் குடியிருப்புகள் மிதக்க கீழ் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி படகில் போகும் நிலைக்கு ஆளானார்கள். இரண்டாம் மாடியில் வசித்த வீட்டு ஓனர்கள் பாதுகாப்பாக தப்பித்தனர். இதைத்தான் மனம் நொந்து,
"இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்
மற்றவர் நீச்சலடித்தே போவார்"என்று கூறியுள்ளார் ஒருவர்.
திட்டமிடப்பாடாத குடியிருப்புகள்
வட சென்னையில் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லாமல் குறுகிய சாலைகளுடன் பிரம்மாண்டமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. உள்ளகரம், புழுதிவாக் கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் என தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
நீர் நிலைகளில் கட்டிடங்கள்
சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்துள்ள பல பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தவை. அவற்றை அழித்தே பல நகர்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெகுவாக விதிமுறைகள் மீறப் பட்டுள்ளன
விவசாய நிலங்கள் அனைத்தும் படிப்படியாக கான்கிரீட் கட்டிடங்களாகவும், சிமென்ட், தார்ச் சாலைகளாகவும் மாறிவிட்டன. இதையே மனம் நொந்து ஒருவர் குறளாக கூறியுள்ளார்.
"எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர் நிலையா என காண்பதறிவு"
தொடர்ந்து நீர்நிலைகளும் அழிக்கப்படுவதால், மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால்தான், மழை வந்தால் சென்னை தத்தளிக்கிறது. மழைநீர் வடிகால்களை சரிசெய்தாலே சென்னையில் மழைவெள்ள பிரச்சினை சரியாகிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.