ஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்
மாட்டு வண்டியில் சீர் கொண்டு சென்றதை ஊர்மக்கள் வேடிக்கை பார்த்தனர்
Recommended Video
ஆலங்குடி: கார்கள், பஸ்கள் ரோட்டில் சரக் சரக்கென பறக்க.. வாழை மரம்.. சீரியல் செட்.. பலூன்கள் பறக்க வந்த மாட்டு வண்டியை கண்டு மக்கள் அப்படி அப்படியே வாயை பிளந்து பார்த்து நின்று விட்டார்கள்.
தாய்மாமன் என்பவர் மற்றொரு தாய்க்கு சமம் என்பார்கள். அதனால்தான், தாய்மான் வீட்டு சீர் என்பது அந்த காலத்தில் நம்மோடு ஒன்றி போய் இருந்தது. இதெல்லாம் இப்போது காணாமல் போய் கொண்டிருக்கிறது.
நாகரீக பிடியில் சிக்கி உள்ள இச்சூழலில், புதைந்து போகும் கலாச்சாரத்தை திரும்பவும் வெளியே கொண்டு வர முயற்சித்துள்ளது ஒரு குடும்பம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு காது குத்து விழா நடந்துள்ளது. திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழாவினை அந்த வீட்டு தாய்மாமன் அசத்திவிட்டார்.
சாலையில் பஸ், கார், லாரி என போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் தாய்மாமன், 3 மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தார். அந்த மாட்டு வண்டிக்கு பலூன்களை கட்டி, சீரியல் செட்டுகளை சுற்றிலும் போட்டு, ரெண்டு பக்கமும் வாழை மரங்களை கட்டி டெகரேட் செய்துவிட்டார்.
மாட்டு வண்டிக்கு முன்னாடி மேளதாளங்கள் முழங்க, "பாடும்போது நான் தென்றல் காற்று" என்று எம்ஜிஆர், பாட்டு ஸ்பீக்கரில் ஒலிக்க.. இதை பார்த்த பொதுமக்கள், 30 வருஷத்துக்கு முன்னாடி நினைவுகளுக்கு போய் விட்டனர்.
அந்த மாட்டுவண்டிகளில் தாய்மாமன் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அமர்ந்து கொண்டும், குழந்தைகள் ஆடிப் பாடிக் கொண்டும் வந்ததை சாலையில் பெரிசுகள் உட்பட எல்லோருமே அதிசயமாக பார்த்துகொண்டே சென்றனர். யார் வீட்டு தாய்மாமனோ இவர்.. நல்லா இருக்கணும்!