சுவாதி கொலையில் மேலும் பலருக்கும் தொடர்பா? அதிரவைக்கும் போலீஸ் விசாரணை
சென்னை: சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி கொலையில் ராம்குமாரைத் தவிர மேலும் பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை திரும்பியிருப்பதாக தெரிகிறது.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் ஒருவருக்கு மட்டுமே தொடர்பிருக்கிறது என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் முன்பு திட்டவட்டமாக கூறியிருந்தார். அத்துடன் சுவாதி கொலையில் வேறு யாருக்குமே தொடர்பில்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பு ராம்குமாரைத் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற பேச்சு பலமாக இருந்தது. தற்போது ராம்குமாரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்துக் கொண்டிருக்கும் போலீசாரோ ராம்குமாருடன் வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று கூட சுவாதியின் நண்பர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருவதாகவும் அதுவும் ராம்குமார் முன்னிலையிலேயே விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. சுவாதி கொலையானபோது ராம்குமாரின் ஒருதலைக்காதல்தான் காரணம் என கூறப்பட்டது.
அப்போது ஊடகங்களிடம் பேசிய சுவாதியின் பெற்றோர், மகள் நல்லவள்... ஆச்சாரங்களைக் கடைபிடிப்பவர்... அவரை விமர்சிக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தனர். தற்போது போலீசாரோ அடுத்தடுத்து சுவாதியின் நண்பர்கள் என ஒரு பட்டியலைப் போட்டு விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர், ராம்குமாருக்கு மட்டுமே தொடர்பு என அடித்துச் சொன்ன பிறகு ஏதேனும் வேறு துப்புகள் கிடைத்து இருக்கலாம்; ஆகையால் போலீஸ் சுவாதியின் நண்பர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்திருக்கின்றனர் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
இருப்பினும் தமக்கும் சுவாதிக்கும் எந்த தொடர்புமே இல்லை; தாம் சுவாதியை பார்த்தது கூட கிடையாது; ஊடகங்களில் வெளியானது எல்லாமே கட்டுக்கதைகள் என ராம்குமார் கூறியதாக அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறிவருகிறார். இது உண்மைதானா? ராம்குமார் பற்றி தம்முடைய நண்பர்களிடம் ஏதேனும் சுவாதி கூறியிருக்கிறாரா? என்பதை அறிந்து கொள்ளவும் கூட போலீஸ் இந்த கோணத்தில் விசாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் சுவாதி கொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் இப்போதைக்கு அவிழப்போவதில்லை போல!