கண்கவர் வண்ணத்தில் வாக்காளர் அடையாள அட்டை... சென்னையில் சிறப்பு வசதி!
சென்னை: சென்னையில் வண்ணத்திலான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெற தேர்தல் ஆணையம் சிறப்பு வசதியைச் செய்துள்ளது. இதற்காக 3 இடங்களில் முகாம் அமைத்து விநியோகித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் முன்பு கருப்புவெள்ளையிலான வாக்காளர் அடையாளஅட்டையை வழங்கி வந்தது. தற்போது அது கலருக்கு மாறியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்தால்
தங்களது வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற விரும்புவோர், இந்த மையங்களுக்குச் சென்று அங்கு தரப்படும் 001D என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, ரூ.25 செலுத்தினால் சுடச் சுட வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம்.
வட சென்னைக்கு
வட சென்னை வாக்காளர்கள், சென்னை ரிப்பன் மாளிகை பொன்விழா கட்டிடத்தின் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகிப் பெறலாம்.
மத்திய சென்னைக்கு
மத்திய சென்னை பகுதி வாக்காளர்கள், அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட செனாய்நகர் மாநகராட்சி அலுவலகத்தில் பெறலாம்.
தென் சென்னைக்கு
தென் சென்னை பகுதி வாக்காளர்கள், அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொது சேவை மையங்களிலும்
இங்கு மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும், 001D படிவத்தைப் பூர்த்தி செய்தும் அதனுடன் ரூ.25 செலுத்தியும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
3 நாட்களில் கிடைக்கும்
பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களுக்குள்ளாக, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.