பழைய 500, 1000 ரூபாய் நோட்டால் அவதிப்படும் வெளிநாட்டு பயணிகள்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு பயணிகள் அவர்களது பணத்தினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
நவம்பர் 8-ம் தேதி இரவு நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிப் போனது.
மேலும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் என்றாலும் வங்கிகளும் இயங்கவில்லை. அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டன. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் புதுசேரிக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் சிலர் அங்குள்ள ஆரோவில் விசிட்டர் சென்டருக்கு ஸ்நாக்ஸ் சாப்பிட சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்களது கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாப்பிட்டனர். சில சுற்றுலாப் பயணிகள் சில்லரை மாற்ற முடியாததால் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல் உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் அவர்களது பணத்தினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளதால் ஒரு சில வெளிநாட்டு பயணிகள் சென்னையில் உள்ள வங்கிகளுக்கு நேற்று சென்றனர். அங்கு கூடியிருந்த கூட்டத்தை பார்த்தை திகைத்து போனார்கள். வேறு வழியில்லாமல் வரிசையில் நின்று பணத்தை மாற்றி சென்றனர்.