உள்ளாட்சித் தேர்தல்… மீண்டும் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி!
சென்னை: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினருக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலின் போது போட்டியிட்ட மெழுகுவர்த்திகள் சின்னத்தையே மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்.சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியானது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தையே பொதுச்சின்னமாக நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
ஆகையினால் நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என கட்சிச் சின்னத்தில் நிற்கக்கூடிய 20,220 பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 'மெழுகுவர்த்திகள்' சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்று பாக்கியராசன் கூறியுள்ளார்.