திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர்- மதிமுகவினர் அடிதடி.. சரமாரியாக தாக்கிகொண்டதால் பதற்றம்!
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
திருச்சி: விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சிக்கும் மதிமுகவுக்கும் இடையே ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக உள்ளது. வைகோவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மீம்ஸ் விவகாரத்தில் மதிமுக தரப்பில் இதுவரை இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளது. இதனால் இருகட்சியினரும் கடந்த சில மாதங்களாக எலியும் பூனையுமாக உள்ளனர்.
ஒரே விமானத்தில்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தனர். இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர்.
போட்டி போட்டு கோஷம்
இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
கைகலப்பாக மாறியது
இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் கொடிக்கம்பத்தை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
பெரும் பதற்றம்
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த திடீர் மோதலால் விமான நிலைய பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.