தமிழகம் போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணு சக்தி அவசியம்- ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாடு போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணுசக்தி அவசியம் என்று கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, இந்தியாவில் டெல்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலையம் என நான்கு இடங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணு உலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்தது என்றார்.
கூடங்குளம் அணு உலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளம் அணு உலையில், உள்ளூர் மக்களின் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தும் என்று கூறினார்.
கூடங்குளத்தில் 2வது அணு உலையின் செயல்பாடுகள் விரைவில் தொடங்க நடவடிக்கை தேவை. இந்திய - ரஷ்ய உறவில் ஒரு மைல்கல் கூடங்குளம் அணு உலை என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டதற்கு ரஷ்ய மக்களுக்கும், ரஷ்ய அதிபருக்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வளர்ந்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மின் தேவையை கூடங்குளம் அணுஉலை பூர்த்தி செய்யும். அணுஉலை குறித்த மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது அவசியமானதாகும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.