அட்டாக் பண்ற புலி... அட்டகாசமான புலி... புலிகளின் எண்ணிக்கை மேலே பாய்கிறது
Recommended Video
கூடலூர்: தமிழகம் மற்றும் கேரளாவில் புலிகள் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வயநாடு சரணாலயத்தில் மட்டும் 80 புலிகள் உள்ளன. இந்திய அளவில், புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
2006-ம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக்காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010 ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
2014ம் வருடம் நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகமான புலிகள் வாழும் மாநிலமாக மத்தியபிரதேசம் உள்ளது. இங்கு 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இலக்கு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
80 புலிகள்
அதன் பலனாக தற்போது புலிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புபடி 190 புலிகள் கேரளாவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக வயநாடு சரணாலயத்தில் மட்டும் 80 புலிகள் உள்ளன.
5-வது இடத்தில் தமிழகம்
இதே போல், புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
புலிகள் காப்பகங்கள்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. உணவு சங்கிலி முறையில், புலி முக்கிய பங்கு வகிக்கிறது.