நாகை கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. அதற்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கன்னியாகுமரி உட்பட தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இதேபோல் கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் நேற்று 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ஆனால் இன்று நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.