குறைந்த சம்பளத்திற்கு வரும் பணியாளர்கள்.. நெல்லையில் அதிகமாகும் வடமாநில தொழிலாளர்!
தமிழகத்தில் கட்டுமான பணிக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதால் வட மாநில தொழிலாளர் வருகை அதிகரித்துள்ளது.
நெல்லை: தமிழகத்தில் கட்டுமான பணிக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதால் வட மாநில தொழிலாளர் வருகை அதிகரித்துள்ளது. நெல்லையிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கட்டுமான பணிகள் மற்றும் செங்கல்சூளை பகுதியில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. உள்ளூரை சேர்ந்தவர்கள் அதிக சம்பளம் கேட்பதால் குறிப்பாக ரூ.600 வரை ஒரு நாளுக்கு கேட்பதால் அவர்களை வேலைக்கு அமர்த்துவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வடமாநில தொழிலாளர்களை வரவழைத்து செங்கல் சூளை பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு குறைந்த கூலியும், சாப்பாடும் கொடுத்தால் போதும். குறிப்பாக கட்டிட வேலைகளில் அவர்களையே ஈடுபடுத்தி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பீகார், ராஜஸ்தான், ஓரிசா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சுரண்டை, களக்காடு, மீனவன்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரிய தற்போது 500 வடமாநில குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் நெல்லை வந்து பின்னர் அங்கிருந்து அந்தந்த செங்கல்சூளை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக போலீசார் ஆய்வு செய்ய வந்தால் அவர்களிடம் காண்பிப்பதற்காக தொழிலாளர்களிடம் குடியிருப்புக்கான ஆதார் சான்று, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் ஜெராக்ஸ் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.