கொலையாளியை படம் எடுத்தவர்கள் தெரிவியுங்கள்... சுவாதி குடும்பத்தினர் வேண்டுகோள்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலையாளி வெட்டும் போது பொதுமக்கள் யாரேனும் கொலையாளியை புகைப்படம் எடுத்திருந்தால் அதனை போலீசாரிடம் தயவு கூர்ந்து அளிக்க வேண்டும் என சுவாதி குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை மின்சார ரயிலுக்காக காத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் பொறியாளர் சுவாதி, மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த இந்த கொலை, பொது மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாதி படுகொலை தொடர்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இளைஞரின் படத்தை கொண்டு ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சுவாதி படுகொலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் பின்னணி தகவல் சுவாதியின் குடும்பத்தினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சுவாதியின் நடத்தையைப் பற்றி தவறாக செய்தி வெளியிட வேண்டாம் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் சுவாதியின் சித்தப்பத கோவிந்தராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது ஜாதி, அரசியல், மதம் சம்பந்தப்பட்ட கொலை அல்ல என்று கூறினார்.
எங்களது குழந்தை குறித்து எங்களுக்கு நன்கு தெரியும். தயவு செய்து சுவாதி குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அது அவளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும். பொதுமக்கள் யாரேனும் கொலையாளியை புகைப்படம் எடுத்திருந்தாலோ, நேரில் பார்த்திருந்தாலோ போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் இந்த வழக்குக்கு உறுதுணையாக இருக்கும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.