சுவாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்!
சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கேமிரா பொருத்த ஒருவருடமாகியுள்ளது. எனினும் அவை இன்னும் வேலை செய்யவில்லை.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பரபரப்பான குற்றங்கள் நடந்தவுடன் காவல்துறை விழித்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். ஆனால், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி பொறியாளர் சுவாதி பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஒருவருடமாகியும் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படவில்லை என்று பணிக்குச் செல்லும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் தேதியன்று ரயிலுக்காக காத்திருந்த சுவாதி வெட்டிகொலை செய்யப்பட்டார். சிசிடிவி கேமிராக்கள் அங்கு இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் திணறிவந்தனர். பிறகு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார்தான் குற்றவாளி என்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரும் மின் கம்பியைக்கடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் நிறைவு அறிக்கை தாக்கல் செய்து மூடு விழாவை போலீசார் செய்துவிட்டனர்.
பணம் ஒதுக்குவதில் சிக்கல்
ஆனால், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு விமோச்சனம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், ரயில்வே துறை மற்றும் ரயில்வே போலீசார் இடையில் யார் பணம் செலவிடுவது என்ற மோதலில் எதுவும் நடக்கவில்லை.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
பொருத்தப்பட்ட ஒரு கேமிராவையும் பணம் கொடுக்காததால் ஒப்பந்ததார் கழட்டிச்சென்றார். தற்போது மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கேமிரா பொருத்தும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. விரைவில் சிசிடிவி கேமிராக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
முறையாக நிதியை பெறவில்லை
இதில், கொடுமை என்னவென்றால், பெண்கள் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிராக்கள் பொருத்த மத்தியரசு நிர்பையா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், மாநில அரசு முறையாக அந்த நிதியை பெற்று திட்டமிட்டு செலவு செய்ய தவறிவிட்டது என்று மகளிர் உரிமை செயற்பாட்டளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
யார் கடமை?
பாதுகாப்பு ரோந்து செல்வது மட்டும்தான் எங்களின் கடமை என்கிறார்கள் இருப்பு பாதை ரயில்வேதுறையினர். குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் எங்கள் கடமை என்கிறார்கள் மாநில ரயில்வே போலீசார். பாதுகாப்பு கருவிகளை பொருத்தி தரவேண்டியது ரயில்வே துறையின் கடமை என்கிறார்கள் காவல்துறையினர்.
விழிக்குமா போலீஸ்
"நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை, விரைவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்நிலையங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும்" என்கிறார் மூத்த ரயில்வே அதிகாரி.அடுத்த அசம்பாவிதம் நடக்கும் முன்பு ரயில்வே துறை, காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.