வரதட்சணைக் கொடுமை, கணவனின் கள்ளக்காதல் - உயிரை மாய்த்துக்கொண்ட ஜீவிதா
வரதட்சனை கொடுமையாலும், வேறு ஒரு பெண்ணுடன் கணவன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்தும் மனம் நொந்த நர்ஸ் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
சென்னை: 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மனம் நொந்து போன நர்ஸ் ஒருவர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் பாரிமுனை ஜார்ஜ்டவுன் பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்த கீதா செல்வரங்கம் தம்பதிகளின் மகள் ஜீவிதா,25. நர்சிங் கோர்ஸ் முடித்துள்ள இவர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று ஆவடி சேக்காட்டைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ரோஸ் உடன் திருமணம் நடைபெற்றது. சாப்ட்வேர் இன்ஜினியரான ரோஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை இருக்கிறார். மார்ச் 5ஆம் தேதியன்று மகள் வைசாலிக்கு பிறந்தநாளாகும். மகளின் பிறந்தநாளைக் கூட கொண்டாட இன்று ஜீவிதா உயிரோடு இல்லை.
திருமண வாழ்க்கை இனிக்கவில்லை
கனவுகளுடன் திருமணம் செய்து கொண்டு போன ஜீவிதாவிற்கு மணவாழ்க்கை அப்படி ஒன்றும் இனிக்கவில்லை. ரோஸ் என்று பெயர் வைத்திருந்த கணவன், முள்ளாக மாறி குத்தினான். கணவன் வீட்டாரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.
கணவருடன் சண்டை
கணவர் ரோஸ், மாமனார் முரளி, மாமியார் சாந்தலட்சுமி, நாத்தனார் சுமதி, அவரது கணவர் நாகேஷ் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் கணவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது கண்டு துடித்து போன ஜீவிதா, இது பற்றி விசாரித்தாள். தினசரியும் சண்டை நடந்துள்ளது.
20 லட்சம் வரதட்சணை
வங்கி ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டார் மாமனார். மாத சம்பளத்தை அவர்களே சுரண்டிக்கொள்வார்கள். இத்தனை கொடுமைக்கு இடையிலும் கர்ப்பமனார் ஜீவிதா, அப்போதும் கொடுமை மாறவில்லை. மனதாலும் உடலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டார் ஜீவிதா. 20 லட்சம் ரூபாய் பணத்துடன் வா. இல்லையென்றால் செத்துப்போ என தரக்குறைவாக பேசி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினார் ரோஸ்.
ஜீவிதா தற்கொலை
கணவனின் செயலில் மனம் உடைந்த ஜீவிதா கடந்த 3ம் தேதியன்று சனிக்கிழமை மதியம் தாம்பரத்தில் இருந்து கோட்டை வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்தார். அம்மாவிடம் போன் செய்து பேசிய ஜீவிதா, தான் தற்கொலை செய்து கொள்வதாக பேசினார். மகளை பார்த்துக்கொள் அம்மா என்று கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குதித்த ஜீவிதா
ரயில் சைதாப்பேட்டைக்கும் மாம்பலத்துக்கும் இடையில் அடையாறு ஆற்றின் மேல் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்தார் ஜீவிதா. அதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மாம்பலம் ரயில்வே போலீசார் ஜீவிதாவின் உடலை அடையாற்றில் இருந்து மீட்டனர்.
கண்ணீர் விட்ட பெற்றோர்
ஜீவிதாவின் பெற்றோருக்கு போன் செய்து தகவல் அவர் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜீவிதாவின் தாய் கீதா சென்னை மாம்பலம் ரயில்வே போலீசில் மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து புகார் அளித்துள்ளார். மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் ரோஸ், மாமனார் முரளி, மாமியார் சாந்தலட்சுமி, மச்சினி சுமதி, அவரது கணவர் நாகேஷ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகளின் பிறந்தநாள்
வைசாலிக்கு நேற்று மார்ச் 5 முதல் பிறந்த நாள் அன்று தாய் உயிருடன் இல்லையே என புகார் கொடுக்க ஜீவிதாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் விட்டு கதறினர். வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் கள்ளத்தொடர்பால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.