நாகர்கோவில் நர்சிடம் சில்மிஷம்.. டாக்டரிடம் விசாரணை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நர்ஸ் ஒருவரிடம், டாக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் 3-ம் ஆண்டு பயிற்சி நர்சாக பணிபுரிந்த மாணவி ஒருவர் மாலை பணியில் இருந்தார். அப்போது அந்த மாணவிக்கு பயிற்சி அளிக்கும் டாக்டர் ஒருவர் அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியுடன் வடசேரி போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு டாக்டர் மீது புகார் கொடுத்தனர். அதில் பயிற்சிக்கு சென்ற மாணவியிடம் டாக்டர் அத்துமீறி நடந்ததாகவும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மருத்துவனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.