ஒரு கையில் ஊசி.. மறு கையில் செல்போன்.. நடுவில் சிக்கிய நோயாளி.. நர்ஸ் கல்பனாவின் அக்கப்போர்!
செல்போன் பேசி கொண்டே நர்ஸ் ஊசி போட்டுள்ளார்
ராணிப்பேட்டை: ஒரு கையில் செல்போன் பேசிக் கொண்டே இன்னொரு கையில் நோயாளிக்கு ஊசி போடுகிறார் கல்பனா நர்ஸ்.. இந்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.. இங்கு ஒருநாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள் இங்குதான் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்... அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்பத்திரி இது.
இந்நிலையில் இங்கு கல்பனா என்ற நர்ஸ் வேலை பார்க்கிறார்.. இவரிடம் வந்த நோயாளி ஒருவருக்கு செல்போன் பேசியபடியே ஊசி போட்டுள்ளார். எதேச்சையாக இதை பார்த்த ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவர் இதை செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்திலும் பதிவிட்டு விட்டார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
செல்போன் அழைப்பு வந்தபிறகு ஊசியை எடுத்து செலுத்தினாரா, அல்லது ஊசி போட்டு கொண்டிருக்கும்போதே செல்போன் அழைப்பு வந்ததா தெரியவில்லை.. இந்த ஒரு அஜாக்கிரதையால், ஊசி மருந்து தவறுதலாக மாற்றி போடுவதற்கும் அபாயம் உள்ளது.
இந்த விஷயம் பெரிய அளவில் உருவெடுக்க ஆரம்பித்தது. இதனால், மாவட்ட அரசு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பரிமளா தேவி, ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர் சிவசங்கரி மற்றும் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நர்ஸ் கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் அளித்த அந்த விசாரணையின் அறிக்கையின்படி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உயர்அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு உயிருடன் விளையாடும் இதுபோன்ற நபர்களுக்கு வெறும் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது, இதைவிட கடுமையான நடவடிக்கையே வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏனென்றால், குனியமுத்தூரில் ஒரு இளைஞருக்கும், சீர்காழியில் பெண் ஒருவருக்கும் இப்படித்தான் அஜாக்கிரதையால் ஊசி போடப்பட்டு, அது கடைசியில் ஆபரேஷன் வரை சென்றுவிட்டது நினைவிருக்கலாம்.