விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர்.. வழிந்தோடிய ரத்தம்.. சிகிச்சை அளித்த நர்சுக்கு காத்திருந்த ஷாக்!
Recommended Video
ஓமலூர்: முகமே தெரியாத அளவுக்கு முழுவதும் ரத்தம் வழிய... வழியும் ரத்தத்தை துடைத்துப் பார்த்த நர்சுக்கு காத்திருந்த அதிர்ச்சி இருக்கிறதே...
உலகத்தில் யாருக்குமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவருக்கு வயது 51. மனைவி சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். 14 வயதில் ஒரே மகள் ஹேமவாணி உள்ளார்.
செல்போனில் பேசினார்
நேற்று சீனிவாசன் தனது அக்காள் வீட்டுக்கு புளியம்பட்டி சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் வந்து மேச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். பச்சனம்பட்டி என்ற இடம் அருகே வந்த போது சீனிவாசனுக்கு ஒரு போன் வந்தது. அதனால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரம்பார்த்து, அவருக்கு பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று சீனிவாசன் மீது பலமாக வீசியது.
தலையில் துணி சுற்றினர்
இதில் சீனிவாசன் வேமாக தூக்கிவீசப்பட்டு உயிருக்கு போராடினார். இதை கண்ட சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து சீனிவாசனை மீட்டு அவருக்கு தலையில் ரத்தம் அதிகம் கொட்டாதவாறு துணியை சுற்றிவிட்டனர். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
முகம் முழுவதும் ரத்தம்
ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்ற ஆம்புலன்சில் இருந்து சீனிவாசனை உடனடியாக உள்ளே அழைத்து செல்லப்பட்டார். ஆஸ்பத்திரி வளாகம் வழியெல்லாம் சீனிவாசனின் ரத்தம்தான். விபத்தில் சிக்கிய உயிருக்கு போராடுபவர் என தெரிந்துவிட்டதால் அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகள் என அனைவருமே ஓடிவந்தனர். உடனடியாக அப்போது அங்கிருந்த டாக்டர் சீனிவாசனின் முகத்தில் முழுவதும் ரத்தமாய் ஒழுகி கொண்டிருந்தது.
விரலில் உள்ள மோதிரம்
எனவே அந்தக்கறையை அகற்றுமாறு நர்ஸ் ஒருவரிடம் கூறினார். அந்த நர்சுதான் சீனிவாசனின் மனைவி சிவகாமி. சீனிவாசனின் முகம், கை, கால்களில் உள்ள ரத்தத்தை சிவகாமி அகற்ற தொடங்கினார். முதலில் கைகளில் தான் ரத்தத்தை அகற்ற ஆரம்பித்தார். அப்போது சீனிவாசனின் விரலில் உள்ள மோதிரத்தை கவனித்தார்.
உயிர் பிரிந்தது
அது திமுக சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் என்பதால் ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டார். இது கணவனின் மோதிரமாயிற்றே என பதட்டமடைந்து தலையில் சுற்றிகிடந்த துணியை விலக்கினார். அப்போதுதான் கணவரின் முகத்தை பார்த்து அலறி கதறி அழுதார். உடனே மருத்துவர்களும் சீனிவாசனை சோதித்து பார்த்ததில், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக கூறினர்.
கட்டிப்பிடித்து அழுதார்
கணவன் என்றே தெரியாமல் மனைவி சிகிச்சை அளிக்க தொடங்கிய மனைவி சீனிவாசனின் உடலை கட்டிப்பிடித்து கொண்டு அழுததை பார்த்த மற்ற மருத்துவமனை ஊழியர்களும் கண்ணீர் வடித்தார்கள். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்