திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள் : பணிக்குத் திரும்ப அரசு எச்சரிக்கை!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் மூன்றாவது நாளாகப் போராடி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் தேர்வு வாரியத்தின் மூலம் 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000க்கும் அதிகமான செவிலியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை முதல் டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய் கிழமை மாலை செவிலியர்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் படிப்படியாக கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கினர்.
ஆனால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி செவிலியர்களில் ஒரு பகுதியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்பவும், விடுப்பிற்கான காரணம் கேட்டும் பொதுசுகாதாரத்துறை செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலளிக்காவிட்டால் பணி நீக்க நடவடிக்கை எடுக்க்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,செவிலியர்களுக்கு பணி நீக்கம் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.
இதனையடுத்து டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். கழிவறை, உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தராத காவல்துறையையும், தங்களை இதுவரை நேரில் சந்திக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.
செவிலியர்களின் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராடி வரும் செவிலியர்கள் கைது செய்யப்படலாம் என்றும், மொத்தமாக பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.