நர்சிங் மாணவி மர்ம சாவு- கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நர்சிங் மாணவி மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே புள்ளாவெளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அழகுசுந்தரி. தூத்துக்குடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை கடந்த அக்டோபர் மாதம் பயிற்சிக்காக மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புகாடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
அழகுசுந்தரியுடன் சேர்ந்து மூன்று மாணவிகள் அங்கு பயிற்சிக்கு சென்றனர். இதற்கிடையே அழுகுசுந்தரி இறந்து விட்டதாக சக மாணவிகள் அழகுசுந்தரி தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புதுக்கடை போலீசில் அவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அழகு சுந்தரி சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக காப்பு காடு மருத்துவமனை டாக்டர் செல்வம் சிவலிங்கம், தூத்துக்குடி தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. சிப்காட் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தியதில் அவர்கள் கலெக்டர் ரவிக்குமாரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.