சம உரிமை கோரி தனியார் செவிலியர் மாணவிகள் போராட்டம்
சென்னை: வேலை வாய்ப்பில் சம உரிமை கோரியும் அரசாரணை 29ஐ உடனடியாக அமல்படுத்தக் கோரி தனியார் செவிலியர் மாணவிகள் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்த மாணவிகளுக்கு அரசு வேலை வழங்கும் அரசாணை 29 செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து அரசு செவிலியர் மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அரசாணை 29ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஒருவாரம் நடந்த போராட்டம், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.
ஆனால், அரசாணை 29ஐ உடனடியாக அமல்படுத்தக் கோரி தனியார் செவிலியர் மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே தனியார் செவிலியர் மாணவிகள் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1000 செவிலியர் மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
அரசாரணை 29ஐ எந்த மாற்றமுமின்றி உடனே அமல்படுத்த வேண்டும், தனியார் ஏழை செவிலியர்களின் கண்ணீரை துடைத்த முதல்வருக்கு நன்றி, எம்ஆர்பி தேர்வை உடனே அமல்படுத்த வேண்டும், வரலாறு காணாத அரசாணை 29ஐ பிறப்பித்த முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளின் போராட்டத்தையொட்டி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் செவிலியர் மாணவிகள் போராட்டம் வீடியோ