அமைச்சரின் உறுதியை ஏற்க மறுப்பு: அரசு செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது!
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்க மறுத்து அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு நர்சிங் கல்லூரி களில் தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை அனுமதிக்க கூடாது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளின் ஐந்தாம் நாள் போராட்டமும், நுழைவு வாயில் உடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம் என்று விஸ்வரூபம் எடுத்துள்ளதால், மருத்துவ துறை வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தது.
அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட போராட்டம் இன்று 5 வது நாளாக நடைபெற்றது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரவு முழுவதும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவிகள் 300 பேரும், கஸ்தூரிபா தாய் சேய் நல மருத்துவமனை பயிற்சிப் பள்ளி செவிலியர் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் சங்கத் தலைவர் ஆர்.அறிவுக்கண் தலைமையில் மாணவிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் மாணவி அறிவுக்கண், முதல்வர் ஜெயலலிதாவால் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த தேர்வாணையம் மூலம் இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் பழைய திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும், அதன் பிறகு புதிய திட்டத்தின் மாணவிகள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்றார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர் மாணவிகளிடம், பேச்சுவார்த்தை விவரத்தை சங்கத் தலைவி அறிவுக்கண் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த மாணவிகள், மருத்துவ தகுதித் தேர்வை முற்றிலுமான நீக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதாமல் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், இதனால் போராட்டத்தை தொடர்வதாகவும் மாணவி ப்ரியா செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.