அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ் எங்கே தங்கப்போகிறார்? பரபரப்பு தகவல்கள்
அரசு பங்களாவை காலி செய்யும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கே தங்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வீட்டின் அருகே குடிபெயர உள்ளார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் அவர் தங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப் போட்டிக்காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக என கட்சி இரண்டாக உடைந்தது.
முதல்வர் ஆசையில் இருந்த சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. இதையடுத்து சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
எடப்பாடி அரசு நெருக்கடி
இதன்காரணமாக சசிகலா ஆதரவு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
குடைச்சல் கொடுத்த சசிகலா தரப்பு
இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட ‘தென்பெண்ணை' பங்களாவை காலி செய்ய ஆளும் சசிகலா தரப்பு அவருக்கு குடைச்சல் கொடுத்து வந்தது.
6 மாதம் அவகாசம் இல்லை
பொதுவாக ஒரு முதல்-அமைச்சரோ அல்லது அமைச்சரோ பதவி இழந்து 6 மாதம் வரை அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்ய அவகாசம் தரப்படும். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
வீனஸ் காலனியில் புதிய வீடு
இதனால் கட்சியினரை சந்திக்கும் வகையில் பெரிய வீட்டை தேடி அலைந்த ஓபிஎஸ், தான் ஆசையாக வளர்த்த காளைகளை தனது உறவினர்களுக்கு தானமாக வழங்கினார். இந்நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் குடியேற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
ஓரிரு நாளில் அரசு பங்களா காலி
இன்னும் ஓரிரு தினங்களில் அரசு பங்களாவை ஓபிஎஸ் காலி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீனஸ் காலனி வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்க உள்ளார் என கூறப்படுகிறது.