பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும்போது தினகரன் எப்படி தொடரமுடியும்?: ஓபிஎஸ் 'சுளீர்'
பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும் போது அவரால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி தொடர முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பொதுச்செயலாளர் நியமனமே தவறாக இருக்கும் போது அவரால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி தொடர முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதாகி ஒரு மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சிப்பணியை தொடரவுள்ளதாக தெரிவித்தார்.
எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கிவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து தான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறினார் டிடிவி தினகரன்.
தினகரன் பேச்சால் பீதி
சிறைவாசத்துக்குப் பிறகு மீண்டும் கட்சிப்பணியை தொடர உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு எடப்பாடி தலைமையிலான அணியினரை பீதியடையச் செய்தது.
எப்படி தொடர முடியும்?
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே தவறாக இருக்கும் போது, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் மட்டும் எப்படி தொடர முடியும் என கேள்வி எழுப்பினார்.
தொண்டர்கள் முடிவு செய்வர்
கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து அதிமுக தொண்டர்கள்தான் முடிவு செய்யவேண்டும். டிடிவி தினகரன் முடிவு செய்யக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே..
உண்மையான அதிமுக நாங்கள்தான், இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே என்று ஓ பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். மேலும் தாங்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இரு அணிகளும் இணையும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாகக் கூறினார்.