ஆட்சிக்கு ஆபத்தா?... மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வுக்குப் பின் ஓபிஎஸ் சொன்னது என்ன?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் சொல்வது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள், இது பற்றி மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எனக்கு ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது என்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கடந்த பிப்ரவரி 2ம் தேதி இரவு 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்புறம் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தகவல் தெரிந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், கோவில் தக்கார், இணை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், வருவாய்த் துறையினர் என அனைவரும் விரைந்து செயல்பட்டனர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் துணையுடன் தீயணைப்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
6 மாதத்தில் சரி செய்யப்படும்
தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தீ 1 மணியளவில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சேத மதிப்புகள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத மதிப்பு வந்த பிறகு 6 மாதத்திற்குள் தீ ஆகம விதி மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விபத்து நடந்த சுமார் 7 ஆயிரம் சதுர மீட்டர் பகுதி பழைய நிலைக்கே கொண்டு வரப்படும்.
பாதுகாப்புக்கு உறுதி
தீ விபத்துக்குக் காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது. இனிமேல் இது போன்ற தீ விபத்துகள் கோயில்களில் ஏற்படாமல் இருக்க குழு அமைத்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கோவில்கள் பாதுகாக்கப்படும்.
இந்து அமைப்புகளிடம் ஒப்படைப்பா?
கடைகள் தான் தீ விபத்துக்குக் காரணம் என்றால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ,அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது, ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. உலகப் புகழ் பெற்ற திருத்தலங்களில் தனியான தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும்.
ஆட்சிக்கு ஆபத்தா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்ததால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது என்றார்.