தினகரன் வாயைத் திறந்தாலே பொய் பொய் பொய்தான்.. ஓ.பி.எஸ். தாக்கு
தினகரன் வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
''கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12-ம் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன்படி அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் தவறு செய்துவிட்டேன், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் கூறினார். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். மேலும், அவர் எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டு, என்னை முதல்வராக்க பன்னீர்செல்வம் விரும்பினார்'' என்றும் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். விளக்கம்
தினகரனின் இந்த பேட்டியையடுத்து அரசியல் களம் பரபரப்பானது. இதையடுத்து, தினகரன் கிளப்பிய பிரச்சனைக்கு செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சந்தித்தது உண்மைதான்
அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் புதிய பிரச்சனை ஒன்றை கூறி மக்களையும், கட்சி தொண்டர்களையும் குழப்புகிறார். இந்த குழப்பங்கள் அனைத்தையும் தினகரன் தங்கத்தமிழ்செல்வன் மூலமே ஏற்படுத்தி வருகிறார். குறிப்பிட்ட அன்றைய தினத்தில் தினகரனை சந்தித்தது உண்மைதான். ஆனால் எப்போது நான் எடப்பாடியுடன் இணைந்தேனோ அப்போதிருந்து தினகரனை திரும்பவும் சந்திக்கவே இல்லை.
எழுச்சியை தடுக்கிறார்
ஆர்.கே.நகரில் எப்படி பொய்களை சொல்லி சொல்லியே ஜெயித்தாரோ, அதேபோல திருப்பரங்குன்றத்திலும் பொய்களை அள்ளி வீசி இடைத்தேர்தலை ஜெயிக்கலாம் என நினைக்கிறார். மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக-வின் எழுச்சியை தடுக்கவும், கட்சியில் பிளவை ஏற்படுத்தவுமே டிடிவி சதி செய்கிறார்.
அந்தப் பக்கமே வராத தினகரன்
நான் ஒன்று கேட்கிறேன். "அம்மா" 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது நாங்கள் எல்லாம் தாடி வைத்துக் கொண்டு, கோவில் கோவிலாக போய்க் கொண்டிருந்தோம். ஆனால் தினகரன் அந்தப் பக்கமே வரவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தார். எந்தக் கோவிலுக்குப் போனார். அவருக்கு என்ன அருகதை இருக்கிறது அம்மா பற்றிப் பேச. அதுதான் தினகரன் மீது எனக்கு கோபம்.
வாயை திறந்தாலே பொய்
இத்தனை தரக்குறைவான, சின்னத்தனமான அரசியலை தினகரன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுகிறார். ஆனால் உண்மைக்கு மாறாக இதுவரை பொய்யான தகவல் எதையுமே சொன்னதில்லை என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
பேட்டியின்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார், மாபா பாண்டியராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.