முதல்வர், பொதுச் செயலாளர் பதவி எனக்கே... கறார் பேரத்தில் ஓபிஎஸ்!
முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.
சென்னை: முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் கொடுத்தால்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதை லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை வரவேற்றார். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு
இதில் தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலும், மக்களின் எதிர்பார்ப்பின் பேரிலும் இரட்டை இலையை மீட்பதற்காகவும் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று எடப்பாடி கோஷ்டியினர் தெரிவித்தனர். இதே கருத்தை பெரும்பாலான அமைச்சர்கள் ஆமோதித்தனர்.
பன்னீரின் நிபந்தனைகள்
எவ்வித நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதை எடப்பாடி கோஷ்டியினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்ற பெரியகுளத்தில் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சசிகலா, தினகரன் குடும்பத்தினர் கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்தார்.
வெற்றிவேல் எம்எல்ஏ காட்டம்
இதற்கு பதிலளிக்கும் வகையில், எம்எல்ஏ வெற்றி வேல் தெரிவிக்கையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதாகவும், பழைய பல்லவியையே பாடுகிறார் என்றும் அவரை நம்பி இறங்கினால் கட்சியை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார் என்றும் சசிகலாவும், தினகரனும் அவரவர் பொறுப்புகளில் நீடிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்ச்சித்து பேசினார். மேலும் முதல்வர், 6 முக்கிய அமைச்சர் பதவிகளை ஓபிஎஸ் கோருவதால் இது சரிப்பட்டு வராது என்ற தொணியில் பேசினார்.
சசிகலாவை ஒதுக்க முடிவு
பன்னீர் செல்வத்தின் நிபந்தனைகளை ஏற்பது குறித்து முதல்வர் எடப்பாடியின் வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், கட்சியின் நலன் கருதியும் சசகிலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
முதல்வர் பதவி எனக்கே
சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது உள்ளிட்ட விவகாரங்களில் நிபந்தனைகள் விதித்த பன்னீர் செல்வத்துக்கு ரகசிய நிபந்தனைகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அதிமுக இணைந்தால் முதல்வர் பதவியும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் தனக்கே வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோருகிறாராம். மேலும் இதற்கு ஒப்புக் கொண்டு மேற்கொண்டு பேசலாம் என்றும் தெரிவித்துவிட்டாராம்.