அதிமுக பொதுச் செயலாளராவார் ஓபிஎஸ்... இது மாஃபாவின் நம்பிக்கை!
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்று விரைவில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரும். அதன்பின்னர், ஓ. பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா
சென்னை: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வந்தவுடன், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.கவில் உள்ளவர்கள் ஓ.பி.எஸ். தலைமையை ஏற்க விரும்புகிறார்கள்.
மக்கள், தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக சசிகலா அறிவித்து விட்டு சென்றார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையம் மறுப்பு
சசிகலா நியமனம் குறித்து தினகரன் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட தினகரன்
ஒரு காலத்தில் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் கட்சி பொறுப்பை ஏற்பதை தொண்டர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதன் அச்சாரமே தினகரனின் பதிலை ஏற்க மறுத்தது. ஆகையால் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சிறப்பான ஆட்சி
ஓ. பன்னீர்செல்வம் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க விரைவில் வீறு நடைபோடும். அ.தி.மு.க வும் இரட்டை இலையும், தலைமைக்கழகமும் உண்மையான அதிமுகவினராகிய நம் பக்கம் வந்து சேரும். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் பேசினார்.
சட்டசபையை விட மக்கள் சபையே சிறந்தது
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், சட்டசபையை விட மக்கள் மன்றமே மிகப்பெரியது. இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர் செல்வம் பக்கம்தான் உள்ளனர். இப்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. இந்த ஆட்சியை மக்களும், தொண்டர்களும் விரும்பவில்லை.
டெபாசிட் இழப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்.கே. நகரில் பேசியபோது, ஆர்.கே.நகரில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளும், எதிர் அணியினரும் டெபாசிட் இழப்பார்கள் என கூறியுள்ளார். இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது. சசிகலா அணி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரை விட கடைசி ஆளாக மிக குறைந்த ஓட்டு வாங்குவது உறுதி. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உண்மையான ஆட்சி மலரும் நாள் மிக விரைவில் வரும் என்றார்.