தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி.. பட்ஜெட் உரையில் மத்திய அரசை நேரடியாக சாடிய ஓபிஎஸ்
tamilndu budget 2018, ops to present budget, tamilnadu assembly and budget, தமிழக பட்ஜெட் 2018, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ், தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்
சென்னை: திராவிட இயக்கத்தால்தான் தமிழகம் வளர்ந்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அவர் பாஜக தலைவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம் இன்று தனது பட்ஜெட் உரையில், திராவிட இயக்கங்களை அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் திராவிட இயக்கத்தால்தான் தமிழகம் பல துறைகளிலும் முன்னேறியது என புள்ளி விவரங்கள் ஆதாரத்தோடு குறிப்பிட்டார்.
நேரடி பதிலடி
பாஜகவுடன் தமிழக அரசு இணக்கம் காட்டுவதாக விமர்சனங்கள் வந்த நிலையில், பாஜக தலைவர்கள் முழக்கத்திற்கு பதிலடியாக ஓபிஎஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதுவும், நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு பட்ஜெட் உரையில் அவர் இந்த வார்த்தைகளை சேர்த்துள்ளது யதேர்ச்சையாக நிகழ்ந்தது அல்ல. திட்டமிட்டே சேர்க்கப்பட்டதுதான் இவ்வார்த்தைகள் என்பது உறுதி.
சிறு சலசலப்புகள்
பிரதமர் மோடி கூறிதான், அதிமுக இணைப்புக்கு சம்மதித்ததாக பன்னீர்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அப்போதே, பாஜக மேலிடத்திற்கும் பன்னீர்செல்வத்திற்கும் இப்போது இணக்கம் இல்லை என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்தன. இதற்கு காரணம், பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பலருக்கும் தமிழக அரசிலும், அதிமுகவிலும் நல்ல பதவிகள் கிடைக்கவில்லை என்பதுதான் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் உரையிலும், பாஜக தலைவர்களுக்கு பதிலடி அளிப்பதை போல ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அநீதி
மேலும், இன்றைய பட்ஜெட்டின்போது, மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் வெளிப்படையாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதனால் கூடுதல் நிதியை தமிழக அரசே செலவிட வேண்டியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார் பன்னீர்செல்வம்.
அரசியல் முக்கியத்துவம்
பிற மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அதிகரித்துள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இதன் மூலம், இந்த பட்ஜெட் உரை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக மத்திய அரசை இவ்வாறு விமர்சனம் செய்யாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.