கலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கவில்லை.. தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்!
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை கிளம்பிவிட்டார்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார். இதன்பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார் பன்னீர்செல்வம்.
அங்கு ஒரு ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் பத்து நிமிடங்களிலேயே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமானத்தில் சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
ஆனால், போலீசாரின் தடியடி, துப்பாக்கி சூட்டால் தூத்துக்குடியின், திரேஸ்புரம், அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சிறுவர்கள் உடல்களில் கூட போலீஸ் லத்தி தழும்பு உள்ளது.
மக்களை பார்க்கவில்லை
ஆனால், பன்னீர்செல்வம் அங்கு சென்று போலீசாரால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள், அம்மக்களை சந்தித்து விவரம் கேட்கவில்லை, ஆறுதலும் கூறவில்லை.
போராட்டத்தின்போது, மர்மமாக எரிந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிடவில்லை
கடமைக்கு பார்வை
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தையும் பன்னீர்செல்வம் நடத்தவில்லை என்பதால், கடமைக்கு பார்வையிட்டு சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடியில் இருந்து கூடிய விரைவில் கிளம்புவதில் பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. அவர் பேட்டியளிக்கும்போது கூட முகம் மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்டது.
கடம்பூர் ராஜு நிலை
நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டபோது, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களும், அவர்களின் உறவினர்களும், அமைச்சரை கேள்விகளால் துளைத்தனர். அவரால் பதிலளிக்க முடியாமல் திணறினார். இன்றும் அதே நிலை பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரால் பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தே முதலிலேயே மீடியாக்களை இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.