தமிழக மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி
தமிழக மாணவர் சரத் பிரபுவின் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
டெல்லி: டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தமிழக மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பூர் பாறைப்பாளையத்தைச் சேர்ந்த செல்வமணியின் மகன் சரத்பிரபு (28). இவர் கோவை அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள யூசிஎம்எஸ் கல்லூரியில் எம்எஸ் படிப்பதற்காக சேர்ந்தார்.
இதற்காக தமிழக மாணவர்கள் 3 பேருடன் கல்லூரிக்கு அருகே வீடு எடுத்து தங்கியிரு்நதார் சரத் பிரபு. பொங்கல் விடுமுறைக்காக ஒரு மாணவன் தமிழகத்துக்கு சென்றுவிட்டார். மற்ற இருவரும் அவரவர் அறையில் தூங்கினர். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணி ஆகியும் சரத்பிரபுவின் அறை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த இரு மாணவர்கள் போலீஸில் தகவலளித்தனர்.
இந்நிலையில் அறைக் கதவை போலீஸார் உடைத்து பார்த்தபோதுதான் சரத்பிரபு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது யூசிஎம்எஸ் கல்லூரியில் வைக்கப்பட்ட சரத்பிரபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.