பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்கி 5 நாட்களுக்கு நடக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி துவங்கியது. ஆளுநர் ரோசைய்யா உரையுடன் துவங்கிய தொடரில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது.
கடந்த 23ம் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். அத்துடன் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் மே மாதத்துடன் அதிமுக அரசின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தனது ஆட்சி காலம் முடியும் முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு அது குறித்து எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசுவார். பட்ஜெட் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.