குடும்ப ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க கூடாது.. போலீசாருக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை
சென்னை: குடும்ப ஆட்சியை எதிர்ப்போருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு குடும்ப ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணை போகும் தங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிக்கும் வகையில், யாருக்கும் எந்திவத இடையூறும் இல்லாமல் தங்களது கண்டனத்தை அமைதியான முறையில் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து வருகிறார்கள். வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனை குரலை வெளிப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்றும், அவரது ஆட்சியில் எவ்வாறு பாரபட்சமின்றி காவல்துறை செயல்பட்டதோ, அதுபோல் தற்போதும் பாரபட்சமின்றி நடுநிலையோடு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அன்போடு காவல்துறையினரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.