பொது மக்கள் அர்ச்சனை.. அலறி போய் போனை சுவிட்ச் ஆப் செய்த சி.ஆர்.சரஸ்வதி !
தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: தொலை பேசி மூலம் தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும், மிரட்டல் விடுப்பது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வம் பெயரைச் சொல்லி சிலர் செல்போன் மூலம் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் செல்போனை ஆன் செய்ய முடியவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கொந்தளித்துள்ளார்.
சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதையடுத்து அவரே முதல்வரா பதவி ஏற்க காய் நகர்த்தி எம்.எல்.ஏக்களையும் மிரட்டி வருவது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இதனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் தரப்பும், சசிகலா தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். பொது மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கேள்வி கேளுங்கள் என்று எம்.எல்.ஏக்களின் தொலைபேசி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன எம்.எல்.ஏக்கள் தங்களது போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில்,, "எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டல் விடுப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான். தொலைபேசியில் அழைத்தும் குறுஞ்செய்தி வாயிலாகவும் பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன. அதனால் எனது செல்போனை அனைத்து வைத்துள்ளேன் என்றார்.