ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. சட்டசபையில் ஓபிஎஸ், தங்கமணி-தினகரன் காரசார வாதம்! அரை மணி நேரம் அனல் பறந்தது
Recommended Video
சென்னை: சட்டசபையில் இன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் தங்கமணியும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக வாதத்தில் குதித்ததால் சிறிது நேரம் அவையில் அனல் பறந்தது.
சுயேச்சை எம்எல்ஏவாக தினகரன் பதவியேற்று சட்டசபையில் காலடி எடுத்து வைத்தது முதலே, ஆளும் அதிமுகவுடன் அவர் மோதலை கடைபிடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்தது.
இருப்பினும் இதுவரை அப்படி பெரிதாக எந்த மோதலும் எழுந்திருக்கவில்லை.
முதல் முறை மோதல்
இன்று முதல் முறையாக இரு தரப்புக்கும் காரசார விவாதம் அரங்கேறியது. சுமார் அரை மணி நேரம் இந்த வாதம் நடந்தது. அதிமுக பெரும்பான்மை, உட்கட்சி குறித்து விவாதம் நடந்தது. பன்னீர்செல்வம், தினகரன், தங்கமணி ஆகியோர் நடுவே இந்த விவாதம் சூடாக நடைபெற்றது.
தினகரன் குற்றச்சாட்டு
அமைச்சர் தங்கமணி, பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், குருமூர்த்தியை அடிக்கடி சந்தித்தது அவர்தான் என்றும், தினகரன் சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கோதாவில் தங்கமணி
இந்த நிலையில், சட்டசபையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தங்கமணியும் தினகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, அரசியல் தொடர்பான கருத்துக்களை சட்டசபையில் விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டு இதற்கு முடிவுரை எழுதினார்.
அவைக்குறிப்பில் நீக்கம்
மேலும், இந்த பேச்சுக்கள் அனைத்துமே அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், அரை மணிநேர விவாதம் சபை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் பேசிய விவரங்களை மீடியாக்களால் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.