அதெப்படி அரசியலைவிட்டு ஒதுங்க விடுவோம்? ஓபிஎஸ்க்கு தடா போட்ட மன்னார்குடி கோஷ்டி!
அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்துக்கு மன்னார்குடி கோஷ்டி தடை போட்டிருக்கிறதாம். சசிகலா முதல்வரானாலும் அப்போதும் அமைச்சரவையில் 2-வது இடம் தருவோம் என உறுதியளித்துள்ளனராம்.
சென்னை: கடும் நெருக்கடிகளால் அரசியலை விட்டு போய்விட நினைத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மன்னார்குடி கோஷ்டி தடை போட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்து 1 மாதம்தான் ஆகிறது. இந்த ஒரு மாதமாக மன்னார்குடி கோஷ்டியிடம் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார் முதல்வர் ஓபிஎஸ்.
மத்திய அரசின் தயவில் முதல்வர் பதவியை ஓபிஎஸ் ஏற்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை மன்னார்குடி கோஷ்டி. அவர் பதவி ஏற்றது முதலே குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது அந்த கோஷ்டி.
இதனிடையே அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிவிட்டார் சசிகலா. அவ்வளவுதான் எவ்வளவு வேகமாக முதல்வர் பதவியை கைப்பற்றிவிட முடியுமோ அவ்வளவு விரைவாக காய்களை நகர்த்துகிறார்கள்.
இதற்காக பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தையும் வாங்கி வைத்துவிட்டது போயஸ் கார்டன். இதில் வெறுத்து போன ஓபிஎஸ் அரசியலைவிட்டே போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் மன்னார்குடி கோஷ்டியோ, அப்படியெல்லாம் பன்னீர்செல்வத்தை எளிதில் விட்டால் எதிர்க்கட்சிகள் வளைத்துப் போட்டு உண்மையை சொல்ல வைத்துவிட்டால் எல்லாமும் சூன்யமாகிவிடும் என அதிர்ந்து போனதாம். இதனால் நீங்கள் அரசியலைவிட்டு போக வேண்டாம்; எப்போதும் போல அமைச்சரவையில் 2-ம் இடத்தில் இருக்கலாம் என வாக்குறுதி கொடுத்தி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.
எங்கிட்டுதான் போவதோ? என ஏகத்துக்கும் டென்சனில் இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.