அதிகரிக்கிறது எடப்பாடி அணி ஆதிக்கம்.. அச்சத்தில் ஓ.பி.எஸ்.. அதிரடி அரசியலுக்கு ஆயத்தம்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியில் இன்று எம்எல்ஏ ஆறுக்குட்டி இணைந்துள்ளார். இதற்கு முன்பாக இவர் ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர் என்பதால் அந்த அணியில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
சசிகலாவுடனான மோதலையடுத்து, பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து வந்தபோது முதல் நபராக ஆதரவு கரம் நீட்டியவர்தான் ஆறுக்குட்டி. படிப்படியாக 12 எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் அணி பக்கம் வந்தனர்.
அமைச்சராக இருந்த பாண்டியராஜனும்கூட பதவி போனாலும் பரவாயில்லை என நினைத்து பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்து வந்தார். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
பன்னீருக்கு பவர்
பன்னீர்செல்வம் அணிக்கு பக்கபலமாக இருந்து டெல்லியிலுள்ள பாஜக தலைமைதான் என்ற தகவல்கள்தான் பன்னீரை நோக்கி ஓடிவர வைத்தது. எதிர்த்தவர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டுகளும் இதற்கு வலு சேர்த்தன.
சாய்ந்த எடப்பாடி
இந்த நிலையில், பன்னீர்செல்வம் ஃபார்முலாவையே கையில் எடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. 12 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள பன்னீர்செல்வத்தைவிட பல்க்காக ஆட்சியையே வைத்துள்ள எடப்பாடி ஆதரவு பாஜக மேலிடத்திற்கும் அனுசரனையாகவே பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நண்பனானது பாஜக.
பாஜகவின் அன்பு
இப்போது கூட பாருங்கள், அதிமுக அரசை யாராவது குறை சொன்னால் எடப்பாடிக்கு முன்பே தமிழிசைதான் அதை கண்டிப்பார். அத்தனை நெருக்கமாக உள்ளது இக்கூட்டணி. அதிமுக 3ஆக பிரிந்திருந்ததாலும், பாஜக கூட்டணி வேட்பாளருக்குதான் குடியரசு தலைவர் தேர்தலில் மூன்று அணியும் ஓட்டு போட்டதில் இருந்தே இது உறுதியாகிறது. இதனால்தான் பதறி துடிக்கிறது ஓ.பி.எஸ் டீம்.
ஆட்சியை காப்பாற்ற உறுதி
5 வருட ஆட்சியை முடித்தே தீருவது என முடிவெடுத்துள்ள பழனிச்சாமிக்கு கொங்கு மண்டல எம்எல்ஏக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். பொன் முட்டையிடும் வாத்தை யாராவது வெட்டுவார்களா? எடப்பாடி அணிக்கு ஆட்சி ஒரு பொன்முட்டையிடும் வாத்து, பாஜகவுக்கோ, தமிழக ஆளும் தரப்பு ஒரு பொன்முட்டையிடும் வாத்து. இதனால்தான் ஓ.பி.எஸ் டீம் படிப்படியாக கவனிப்பாரற்று மாறிவருகிறது.
கரைகிறது ஓ.பி.எஸ் டீம்
ஆட்சி அதிகாரம் அந்தபக்கம், மத்திய அரசும் ஆதரவு என்பதால் மெல்ல கரைய ஆரம்பித்துள்ளது ஓ.பி.எஸ் டீம். ஆறுக்குட்டியை தொடர்ந்து மேலும் பலரும் அந்த பக்கம் போனால் என்ன ஆவது என்ற அச்சத்தில் உள்ளது ஓ.பி.எஸ் தரப்பு. எனவேதான் அவசரமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நண்பனை போல இருந்த எடப்பாடி தனது அணியை உடைத்துவிட்டாரே, இருக்கும் 11 எம்எல்ஏக்களும் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினால் என்ன செய்வது என்ற கோபத்தில் ஓபிஎஸ் தரப்பு குடைச்சலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இனி தமிழகத்தில் அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது.