ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை மீண்டும் கேபினட் கூட்டம்
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டி விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்துத் துறைகளும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார்.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக விவாதிக்ககப்பட்டது. அதன் பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய அரசின் உதய் மின் திட்டம், காவிரிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.