இணையப் போகும் இபிஎஸ்- டிடிவி கோஷ்டிகள்.. தனியே.. தன்னந்தனியே விழிபிதுங்கும் ஓபிஎஸ்!
அதிமுகவின் உள்கட்சிப் பூசலுக்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் பல நிகழ்வுகள் அரங்கேற இருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : சட்டசபையில் திராவிட இனத்தின் தலைவர் தினகரன் என்று டிடிவியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எடப்பாடி கோஷ்டியின் இந்த அமைதி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விரைவில் எடப்பாடி- தினகரன் கோஷ்டிகள் கை கோர்க்கலாம் என்ற நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி யோசிக்கிறார் ஓ.பி.எஸ். தனி அணியாக பிரிந்து 5 மாதங்கள் ஓடிவிட்டன, ஆனால், பெரியளவு அரசியல் மாற்றத்தையோ, ஆளும் கட்சிமீது வெறுப்புணர்வையோ ஓபிஎஸ் அணியால் ஏற்படுத்தமுடியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை, சசிகலா குடும்பத்தாரை கட்சியை விட்டு ஒதுக்குவது என்ற கோரிக்கைகளை கட்சியில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்றுதான் கூறப்படுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதுதான் தற்போது மிக முக்கியமான அம்சம் என்று பெரும்பாலான அதிமுக மூத்த நிர்வாகிகள் கருதுகிறார்கள். அதைவிடுத்து, ஓ.பி.எஸின் செயல்பாடுகள் கட்சியினரிடையே வரவேற்பை பெறவில்லை என்பதை பார்க்கமுடிகிறது. ஆனால், ஓ.பி.எஸ் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வருகிறது.
கூட்டம் சேர்வது எதற்காக?
அதற்கும் சில விளக்கம் கூறப்படுகிறது. அதாவது, ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால், ஓ.பி.எஸ், ஜெயலலிதாவில் அடையாளம் காட்டப்பட்டவர் என்பதால், அவருக்கு நல்ல பெயர் உள்ளது என்கிறார்கள்.
அடுத்து என்ன?
அணிகளை இணைக்க அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகுழுவை ஓ.பி.எஸ் கலைத்துவிட்டார். ஆனால், அடுத்தது என்ன என்ற கேள்விக்கு அவரது முகாமில் பதில் இல்லை.
விரைவில் அணிதாவல்
இன்னும் சொல்லப்போனால், அவரது முகாமைச் சேர்ந்தவர்களில் பலர் டிடிவி அணிக்கு தாவத்திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வேகமாக கசிந்துவருகிறது. முன்னாள் கல்வி அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் டிடிவி வீட்டிற்கு எந்த நேரத்திலும் வரலாம் என்ற தகவல் உள்ளது. இந்த நிலையில், தான் என்ன செய்வது என்பதை முடிவு செய்யமுடியாமல் ஓ.பி.எஸ் தவித்துவருகிறார் என்று சொல்லப்படுகிறது.
டெல்லி கதவை தட்ட திட்டம்
இதனிடையே டெல்லியில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் ஓ.பி.எஸ், ஆனால், இன்னும் நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அணிகள் இணைந்துவிடும் என்பதாலும், ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் திறக்க பிரதமர் நேரம் கொடுத்தாலும், அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சென்னை ஜார்ஜ் கோட்டை, டெல்லி செங்கோட்டைக்கும் வலுவான உறவு உண்டாகி விட்டதால், ஓபிஎஸ் கழட்டிவிடப்படுகிறார் என்கிறது டெல்லி தகவல். எது எப்படியோ, மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவருகிறது.