மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடத்த முயன்ற ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது! அடக்குமுறை ஆரம்பம்?
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான சாலை முத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிப்பதாக அறிவித்த நிலையில் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ய தொடங்கியுள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.
நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்றார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று ஒருநாள்தான் விழிப்புணர்வு பேரணி நடத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால் அதை காவல்துறை துணை கொண்டு தடுக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான சாலை முத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓ.பி.எஸ். அணி சார்பில் வாக்காளர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக முத்துவை ஆண்டாள்துறை பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தெரிகிறது.
நேற்று மாலையிலேயே ஓ.பி.எஸ் வீடு மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தமிழகம் முழுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு காவல்துறை மூலமும், தனிப்பட்ட விஷமிகளின் தாக்குதல் மூலமும் நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.