திருப்பரங்குன்றத்தில் எதிரிகளோடு, துரோகிகளையும் வீழ்த்தி 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி: ஓபிஎஸ்
Recommended Video
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.
இடைத்தேர்தல் தொடர்பாக, மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தொகுதியில், கழக செயல்வீரர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேர்தல் எப்போது வந்தாலும் உறுதியாக அதிமுக கிட்டத்தட்ட 50,000 வித்தியாசம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் கழகத்தினுடைய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அதிமுகவுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஆர்வத்தோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள். எப்பொழுது தேர்தல் வந்தாலும், எதிர்த்து நிற்கின்ற எதிரியையும், துரோகியையும் தோற்கடிப்போம் என்று சபதம் ஏற்று உள்ளனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் வரலாறை எடுத்துக் கொண்டால் அனைத்து சட்டசபை தேர்தலிலும், அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் மூலமாக நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கான வேட்பாளரை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அறிவிப்போம். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏகே போஸ் மரணமடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத் தேர்தலில் திமுக மட்டுமின்றி தினகரன் கட்சியும் களமிறங்க உள்ளது. எனவே அதிமுக இதை கவுரவ பிரச்சினையாக நினைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.