பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ சரவணனிடம் 2 மணிநேரம் போலீசார் துருவி, துருவி விசாரணை
பன்னீர்செல்வம் ஆதரவு மதுரை தெற்கு தொகுதி, எம்.எல்.ஏவான சரவணனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேரில் ஆஜரான அவரிடம் சுமார் 2 மணிநேரமாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் அங்கிருந்து தப்பி வந்து, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சரவணன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், கூவத்தூரில் தங்கியிருந்தால் சசிகலாவிடம் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி ஸ்கெட்ச் போட்டு மாறுவேடத்தில் தப்பித்து இங்கு ஓடி வந்தேன். கூவத்தூரில் தங்கியுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் பாதிக்கப்பட்டேன். தமிழக மக்கள் பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது புகார் குறித்து சம்மன் அளித்து விளக்கம் கேட்டது. காவல்துறை. சம்மனை பெற்றுக்கொண்ட சரவணன், டி.எஸ்.பி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவதற்காக அவரது வழக்கறிஞருடன் மாமல்லபுரம் சென்றார்.
எம்.எல்.ஏ. சரவணனிடம் 2 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. கல்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வைத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.