இந்த 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் கூட்டணி.. அல்லது தேர்தல்தான்: ஓ.பி.எஸ் டீம் கறார்
கட்சி பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக, சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதங்களை பெற வேண்டும். ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், 2 நிபந்தனைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் இரு அணிகள் நடுவேயான பேச்சுவார்த்தை குறித்த நகர்வுகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முனுசாமி முன்வைத்த இரு கோரிக்கைகள் இவைதான்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற வேண்டும்.
கட்சி பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக, சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதங்களை பெற வேண்டும். இதையடுத்து சசிகலா, தினகரனுடனும் அவரது குடும்பத்தாருடனும் யாரும் தொடர்பு வைக்க கூடாது என ஜெயலலிதா பாணியில், அறிவிக்க வேண்டும். அதை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.
ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதன்பிறகுதான் குழு அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை நடக்கும்.
இந்த அடிப்படை கோரிக்கை நிறைவேறாமல் அவர்களுடன் பேசி பலனில்லை. பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டால், மக்கள் ஆதரவு கிடைக்கும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் பலிகடாவாக முடியாது. இப்போது தேர்தல் நடந்தாலும், பன்னீர்செல்வத்தைதான் மக்கள் முதல்வராக்குவார்கள். ஸ்டாலின் எல்லாம் முதல்வர் பதவிக்கான ரேஸிலேயே கிடையாது. இவ்வாறு முனுசாமி தெரிவித்தார்.