மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம்? பரபர பின்னணி தகவல்கள்
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று அதிமுக கூட்டத்தில் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பல காலமாகவே இதுபற்றி ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொள்ள பின்னணி காரணம் இல்லாமல் இல்லை.
அதிமுக அமைச்சரவையிலேயே மிகவும் சாதுர்யமானவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உணர்ச்சி வசத்தில் வார்த்தைகளை வெளியிடுபவர் இல்லை. எனவே பின் விளைவுகளை தெரிந்தேதான், இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பன்னீர்செல்வம்.
பாஜக கோபம்
இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதன் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்து தினகரன் வெற்றி பெற்றது முதலே, பாஜகவுக்கு பன்னீர்செல்வம்-எடப்பாடி அணி மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இவை ஓடாத குதிரைகளோ என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவேதான், இவர்கள் இணைப்புக்கு மத்தியஸ்தம் செய்த, சென்னை அறிவுஜீவி ஒருவர், கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பிறகு அதிமுகவினர் கோபத்திற்கு ஆளாகி, தனது வார்த்தைக்கு வேறு பொருள் இருப்பதாக சமாளித்தார்.
ரஜினி திடீர் என்ட்ரி
ஆர்.கே.நகரில் பாஜக படுமோசமாக தோற்றது. அதிமுகவும் தோற்றது. இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் அறிவிப்பை வெளியிட்டார். இப்போது பாஜகவின் செல்லக்குழந்தை அவர்தான். எனவே, அதிமுகவை டேமேஜ் செய்யும் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர் தமிழக பாஜகவினர்.
அதிமுகவை சீண்டும் பாஜக
தமிழக இந்து அறநிலையத்துறை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் எச்.ராஜா, தமிழிசை அவ்வப்போது அமைச்சர்களை சீண்டி வந்தார். ஆனால் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு பகீர் ரகம். தமிழகம் தீவிரவாத இயக்கங்களின் பயிற்சி களமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது என அவர் கூறினார். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356ன்கீழ் ஆட்சியையே கலைக்க கூடிய அளவுக்கான குற்றச்சாட்டு இது.
ஓபிஎஸ் பதிலடி
பொன்னாரின் இந்த திடீர் தாக்குதலால் விழித்துக்கொண்டது அதிமுக தரப்பு. அதிலும், ஓபிஎஸ் தரப்பு. பொன்னார் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என பன்னீர்செல்வம் பதிலடி தொடுத்தார். உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துள்ள முதல்வரே சும்மா இருக்கும்போது ஓபிஎஸ், மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
மோடிக்கு எதிராக தர்மயுத்தம்
இந்த நிலையில், மோடி கூறிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்ததாக ஓபிஎஸ் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. "நீங்கள் சொல்லிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், இப்போது அதிமுகவில் எனது ஆதரவாளர்களுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை, உங்கள் கட்சிக்காரர்களே தாக்குதலும் நடத்துகிறார்கள்" என்று மோடிக்கு சிக்னல் கொடுக்கும் முயற்சிதான் இந்த பேச்சு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தனது ஆதரவாளர்களுக்கு விரைவில் அதிமுக கட்சிக்குள் முக்கிய பதவிகள் வேண்டும் என்று லியுறுத்தி மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தொடுத்துள்ள தர்மயுத்தம் இது என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர்.
எடப்பாடிக்கும் சிக்னல்
மோடி கூறியதால்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், எனக்கு முழு மனதாக இந்த இணைப்பில் சம்மதம் இல்லை என்று எடப்பாடி தரப்புக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாகவும் ஓபிஎஸ் பேச்சை எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இப்போது பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் இடத்தில் மோடியும், எடப்பாடியும் உள்ளனர். அல்லது, மற்றொரு யுத்தம் தர்மத்தின் பெயரால் தொடங்கப்படலாம்.