இனிமே எல்லாம் இப்படித்தான்.. பருப்பு பற்றாக்குறைக்கு கூட பன்னீர்செல்வத்தை குற்றம்சாட்டும் அமைச்சர்!
பொதுவிநியோக திட்டத்தின் செயல்பாடு சுணக்கமானதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்தான் காரணம். சிறப்பு பொதுவிநியோக திட்ட அனுமதியை நீடிக்காமல் இருந்தார் என அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பு பற்றாக்குறை ஏற்பட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்தான் காரணம் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார் அமைச்சர் காமராஜ். இதன்மூலம், மக்களின் அதிருப்தியை அப்படியே, பன்னீர்செல்வம் பக்கம் மடைமாற்றும் வேலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் வழங்கப்படும் பாமாயில், உளுந்து, துவரம்பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டட சுமார் 88 ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அவர் கூறுகையில், பொதுவிநியோக திட்டத்தின் செயல்பாடு சுணக்கமானதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்தான் காரணம். சிறப்பு பொதுவிநியோக திட்ட அனுமதியை பன்னீர் செல்வம் நீடிக்காமல் இருந்தார். எனவேதான் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீராகிவருகிறது
தற்போது, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பருப்பு, பாமாயில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் பேட்டி
இதனிடையே நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வினியோகத்திற்கு, என 20,000 டன் பருப்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,000 டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷனில் பாமாயில் , பருப்பு கொடுக்கத் தொடங்கிவிட்டோம்.
கொள்முதல் துரிதம்
அனைத்துக் கடைகளிலும் பாமாயில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) போடப்பட்டு அதை நடைமுறைப்படுத்தி, விரைவாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பருப்பு, பாமாயில் வழங்கப்படும். ஒருவாரத்தில் நிலைமை சீராகிவிடும் என கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை குற்றம்சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.