உழிச்சல், பிழிச்சல்.. பன்னீர்செல்வத்தை ஒரு வழி செய்யப்போகும் சிகிச்சை முறைகள்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை கோவை வந்தார். ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றார்.
பிரபலங்கள்
இந்த வைத்திய சாலை கேரள ஆயுர்வேத முறையில் புத்துணர்வு அளிக்கும் சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது ஆகும். இதற்கு முன்பு சுப்பிரமணியசுவாமி, கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
3 நாளைக்கு சிகிச்சை
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மொத்தம் 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், ஆயுர்வேத மசாஜ் (பிழிச்சல்) மேற்கொள்ள உள்ளார்.
பல்வேறு வகையான இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணை உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
புத்துணர்ச்சி
பன்னீர்செல்வம் புத்துணர்ச்சி பெற்று வந்ததும், தமிழக அசியலில் மீண்டும் அவர் பரபரப்பை கிளப்புவார் என எதிர்பார்க்கலாம். அதற்குள்ளாக எதிர் தரப்பு என்ன காய் நகர்த்த காத்திருக்கிறதோ தெரியவில்லை.
போருக்கு ரெடி
இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. அதில் என்ன மாதிரி ஆலோசனைகள் நடைபெறும் என்பதை பொறுத்து அரசியல் களம் அடுத்த கட்டத்திற்கு நகரும்.அதற்குள்ளாக பன்னீர் உடல் மற்றும் மன ரீதியாக ரெடியாகிக்கொண்டுள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.